சர்வதேச இளைஞர் தினம்
சர்வதேச இளைஞர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி நினைவு கூறப்படுகிறது. 1999ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்ட பின் 2000ம் ஆண்டு ஆகஸ்ட் 12இல் முதன் முதலாக சர்வதேச ரீதியில் இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் இவ்வருடமும் இளைஞர் தினம் கொண்டாடப்படுவதுடன் அதன் கருப்பொருள் "நிலைப்பேண் உலகை நோக்கிய இளைஞர்களுக்கான பசுமைத் திறன்கள்" (Green skills for youth towards a sustainable world) என்பதாகும்.
பசுமை உலகத்தின் வெற்றிகரமான மாற்றத்திற்கு இன்றைய இளைஞர்களின் பங்கு முக்கியமானதாகும். வளங்களின் நிலைப்பேன் அபிவிருத்திற்கு தேவையான அறிவு, திறன், அணுகுமுறைகள் என்பவையை மேம்படுத்த வேண்டி உள்ளதோடு தொழில்சார் அமைப்புகளில் பசுமை தொழில்நுட்பம் மற்றும் செயன்முறைகளை திறம்பட பயன்படுத்த உதவும் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை இளைஞர்கள் மத்தியில் வளர்க்க வேண்டிய அவசியத்தையும் இவ்வருடத்திற்குரிய கருப்பொருளானது சுட்டிக்காட்டுகிறது.
உலக சனத்தொகையில் பெரும்பாலானோர் இளைஞர்களாக இருப்பதுடன் இவர்கள் சமூகத்தின் ஆணிவேராகவும் திகழ்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபை 15 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களை இளைஞர்கள் என வரையறுத்துள்ளது. சர்வதேச இளைஞர் தினம் இளம் திறமைகளை அங்கீகரிக்கும் வாய்ப்பை வழங்குவதோடு இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கொண்டு வருவதை நோக்கமாக கொண்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் பொது வாழ்வில் இளைஞர்களின் உரிமையை வலியுறுத்தும் தினமாக ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் அனைத்தும் இளைஞர் தினத்தை கொண்டாடுகின்றன. காரணம் இன்றைய இளைஞர்கள் சவாலான உலகின் சுமைகளை சுமப்பதோடு வேலையின்மை, அதிகரித்த வாழ்வாதார செலவு, மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புக்கள் போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
எனவே இவ்வருடமும் பசுமை திறன்களை இளைஞர் மத்தியில் வளர்க்க செய்து அவர்களை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி நிலைப்பேண் உலகொன்றை அமைக்கவும் அவர்களின் உணர்வுகளை நெறிப்படுத்துவதுடன் வெற்றி மனப்பாங்கினையும் ஏற்படுத்துவோமாக.
M.N.F.Nifla
University of Colombo
Faculty of Arts
2nd year